கடலூர்: திருமணமான ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புதுமணப்பெண் மீட்பு
கடலூரில் காதல் திருமணமான பெண்ணொருவர், திருமணமான ஒரே மாதத்தில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரம்யாவும் கடலூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் 6ம் தேதி ரம்யாவும் கார்த்திகேயனும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ரம்யா நேற்று தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக கார்த்திகேயன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் ரம்யாவுக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வந்திருக்கிறது. எனவே கழிப்பறை உள்ள வீடு பார்க்க வேண்டுமென ரம்யா கார்த்திகேயனிடம் வற்புறுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரம்யா தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார். தொடர்ந்து கழிப்பறை உள்ள வீடு பார்க்க வலியுறுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரம்யா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி கொடுத்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து காதலித்து கல்யாணம் செய்த கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால்தான் திருமணமான ஒரே மாதத்தில் ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இச்சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரம்யா தற்கொலை குறித்து அவரது குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதேசமயத்தில் திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் உயிர்யிழந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை தொடங்கியுள்ளது.