போலீஸ்காரர் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு என குற்றச்சாட்டு
கடலூர் அருகே போலீஸ்காரர் ஒருவர் தாக்கி தொழிலாளி உயிரிழந்தாக புகார் எழுந்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகே திருமாணிகுழியில் கெடிலம் ஆற்றில் மணல் அள்ளிய மாட்டு வண்டி ஓட்டிவந்தவரை போலீஸ்காரர் ஒருவர் ஹெல்மெட் கொண்டு தாக்கியதில் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருமாணிக்குழியில் இறந்து போன தொழிலாளியின் உடலை வைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அடித்து கொலை செய்த போலீஸ்காரர் மீதும், மாமுல் வசூல் செய்ய உத்தரவிடுகிற பண்ருட்டி டி.எஸ்.பி சுந்தரவடிவேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரினர். 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அல்லது அரசு வேலை வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். இதனால் அங்கு சுமார் 200 போலீசார் குவிக்கப்பட்டனர். இது சம்பந்தமாக தாசில்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அவர்கள் கலையாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.