திருச்சி: மக்கள் கூட்டத்தால் வழியும் கொரோனா பரிசோதனை மையம்
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கோவிட் பரிசோதனை செய்யும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்துள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகத்தினரால் போதிய இருக்கை வசதிகள் செய்யப்பட்டும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மக்கள் காத்திருக்காமல், வேகமாக பரிசோதனை எடுக்கும் நோக்கத்தில் கூட்டமாக நிற்பதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.
மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் அடுத்தடுத்து பரிசோதனை எடுக்கப்படும் என்று கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் மக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கோவிட் பரிசோதனை மையம் கூட்டமாக காணப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் வேகமாகவும் பாதுகாப்பாகவும் பரிசோதனை மேற்கொள்ள முடியுமென மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்