தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 30% உயர்வு!
வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட NCRB-யின் ‘இந்தியாவில் குற்றம் 2024’ (Crime in India 2024) அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 11,363 வழக்குகள் பதிவாகியுள்ளன; 2023-ஆம் ஆண்டில் 8,943 வழக்குகள் பதிவாகியிருந்தது. 2022-ஆம் ஆண்டில் 9,207 வழக்குகள் பதிவாகியிருந்தது.
2024-ஆம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகள், பாலியல் வன்கொடுமை மற்றும் பின்தொடர்தல் முதல் குடும்ப வன்முறை மற்றும் இணையவழித் துன்புறுத்தல் வரையிலான பல்வேறு பிரிவுகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது.
இந்த தரவுகளின்படி 2024-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சுமார் 30% அதிகரித்துள்ளது. மொத்தமாகப் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,363 ஆக உயர்ந்துள்ளது.
2023இல் இந்த எண்ணிக்கை 8,943 ஆகும். 2024இல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகபட்சமாக கணவர் அல்லது கணவர் வீட்டு உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக 3,344 வழக்குகள் பதிவாகி உள்ளன. 419 பாலியல் வன்கொடுமை, 1,911 கடத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 198 ஆக உள்ளது.
தேசிய அளவில் தமிழகத்தின் குற்ற விகிதம் ஒரு லட்சம் பெண்களுக்கு 29.4 ஆக உள்ளது. இது அதிகபட்சமாக தெலங்கானாவில் 128.6, ஒடிசாவில் 118.3, மற்றும் ஹரியாணாவில் 96.4 ஆக உள்ளது. குஜராத் 22, மணிப்பூர் 12 என சில மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் தமிழகத்தைவிடக் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் 93% வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

