காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!

காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!
காதல் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் வழக்கு!

காதல் மனைவியை கண்டுபிடித்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி கிரிக்கெட் வீரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தஞ்சை பேராவூரணி அருகே பெருமகளூரைச் சேர்ந்தவர் சுரேந்திரன். சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இவர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நான் சிங்கப்பூர் நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். நானும் தஞ்சாவூரைச் சேர்ந்த சிநேகா என்பவரும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு சிநேகா குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் சிநேகாவுக்கு அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர்.

இதை சிநேகா என்னிடம் தெரிவித்தார். இதனால் நாங்கள் இருவரும் கடந்தாண்டு டிசம்பர் 13ல் திருவோணம் செல்வமுருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். தற்போது சிநேகாவை அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர். சிநேகாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு மறுத்தால் சிநேகாவை ஆணவக் கொலை செய்யும் அபாயம் உள்ளது. தற்போது சிநேகா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தும் சிநேகாவைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே என் மனைவி சிநேகாவைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம்,  இளங்கோவன் அமர்வு, வழக்கு குறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , பட்டுகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை ஜனவரி 29ஆம்  தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com