”3ல் 2 பெரும்பான்மை; பாஜக அரசியலைப்பு சட்டத்தையே கூட மாற்றிவிடும்” - பெ. சண்முகம் விமர்சனம்!!
திருவாரூரில் உள்ள தனியார் அரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பேசிய பெ. சண்முகம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிவித்ததுடன் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ” நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம், பாஜக முன்னேறி இருக்கிறார்கள். முறையாக தேர்தல் நடத்தி பாஜக வெற்றி பெறுவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால், பாராளுமன்றத்துக்குள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற வேண்டும் என்பதற்காக தீய நோக்கத்தோடு பல்வேறு கட்சிகளை உடைப்பது, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது போன்ற செயல்களை நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-காரர்கள் 3ல் 2 பங்கு பெரும்பான்மை பெரும் பட்சத்தில், அரசியலமைப்பு சட்டத்தை கூட மாற்றி விடுவார்கள். ஜனநாயக, சோசலிச, குடியரசு என்கிற அரசியல் சாசன முகப்பிலேயே இருக்கக்கூடிய கோட்பாடுகள் அனைத்தும் மாற்றப்படும். இது மதச்சார்பற்ற நாடு என்பதற்கு பதிலாக இது மதச்சார்புள்ளள நாடு என்ற முறையில் தான் முதலில் அரசியல் சாசனம் திருத்தப்படும்.
தொகுதி மறு வரையறை தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்பட்டால், ஆச்சரியப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நேற்று கூறும் போது, நாங்கள் எதிர்பார்த்த மாதிரியான திருத்தங்கள் எல்லாம் அந்த தொகுதி மறு வரையறை சம்பந்தமான மசோதாவில் இருக்குமானால் நாங்கள் அதை எதிர்க்க மாட்டோம் என்று ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்கள்.
மசோதா என்ன வருவது என்று தெரிவதற்கு முன்பே அவர் அவ்வாறு கூறுவதற்கு காரணம் என்ன..? மசோதா வந்த பிறகு கூட அவர் அந்த கருத்தை சொல்லி இருக்கலாம்.
மே 8-ம் தேதி தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்ற முடிவெடுத்த போது, பாராளுமன்றத்திற்குள் இத்தகைய பிரச்சனைகள் வருகிற போது ஒருங்கிணைந்த அணுகுமுறையை திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளோடு தொடர்ந்து நாம் கடைப்பிடிப்போம் என்பதுதான் நாங்கள் அறிவித்தோம். ஆனால், தற்போது நடைபெற இருக்கக்கூடிய பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகப்பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

