மதுரையில் மழைநீர் கால்வாயில் விழுந்து உயிருக்குப் போராடிய பசுவை தீயணைப்புதுறையினர் பத்திரமாக மீட்டுள்ள சம்பவம் அப்பகுதிமக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
மதுரை காளவாசல் துரைச்சாமி நகர் பகுதியில் சாலையோரத்தில் புற்களை மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று திடீரென அப்பகுதியில் இருந்த மழைநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதனையடுத்து நெடுநேரமாக பசு கால்வாயில் இருந்து மீளமுடியாமல் தவித்து வந்ததாகத் தெரிகிறது.
அதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கால்வாயில் சிக்கிய பசுமாட்டை கயிறு மூலம் பொதுமக்கள் உதவியோடு பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பசுவிற்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் மூலமாக உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் கால்நடைகளை மீட்பதில் துரிதமுடன் செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டதை கண்ட பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.