அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீனா? இன்று உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்த அமலாக்கத்துறையினர் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கடந்த மாதம் தாக்கல் செய்தனர். இதனிடையே பிணை கோரி செந்தில் பாலாஜி தாக்கல்செய்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
வழக்கில் ஆதாரமோ சாட்சிகளோ இல்லை என்றும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறி பிணை வழங்கக்கோரி வாதிட்டனர். அதேநேரத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பிணை வழங்க முடியாது எனவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் செந்தில்பாலாஜி பிணை மனு மீதான உத்தரவை நீதிபதி அல்லி ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று 81ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
எனவே இந்த பிணை குறித்தான உத்தரவானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட இருக்கின்றது.