தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அனுமதி அளித்துள்ளது.
குமரி மகா சபை செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ’கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கும் நோக்கில் மத்திய அரசால் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அந்தப் பள்ளிகளை தொடங்க மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. எனவே தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில், ’தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் எஸ்.எஸ்.எல்.சி. வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதி அளித்தும் பள்ளி தொடங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவது பற்றி முடிவெடுக்க தமிழக அரசுக்கு 8 வார கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.