சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு
சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு , சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான ராஜ்மோகன் சந்திராவை, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி காலை 6 மணியளவில் சிலர் தாக்கி கொலை செய்தனர். இதுதொடர்பாக மனைவி ஆலயம்மா ஜோசப் அளித்த புகாரில் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வெங்கடேசன், செல்வம், வீராசாமி, மீனாட்சி உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 2012 ஆகஸ்ட் 28ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்திற்கு 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஆலயம்மா ஜோசப் தொடர்ந்துள்ள வழக்கில், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரனைக்கு உத்தரவிட வேண்டும், கணவர் அம்பலப்படுத்திய சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும், கணவரின் மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது மனுவில், தனது கணவர் ராஜ்மோகன் சந்திரா, காவல்துறை, வருவாய்த்துறை, வழக்கறிஞர்கள், மாஜிஸ்திரேட் ஆகியோரின் சட்டவிரோத செயல்பாடுகளையும், கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு, மணல் திருட்டு தொடர்பான விஷயங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ராஜ்மோகன் சந்திராவே ரியல் எஸ்டேட் தொடர்பான விவகாரங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும், காவல்துறை எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து செயல்பட்டதால், எதிரிகள் அதிகமான நிலையில்  இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொதுமக்களின் நலனுக்காக போராடுபவர்களின் இதுபோன்ற கொலை வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்த வேண்டியது நீதிமன்றங்களின் கடமை என்றும், விசாரணையை தாமதிப்பது என்பது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார். குறிப்பாக எட்டு வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படாமல், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக ஜனவரி முதல் வாரமே வழக்கை விசாரணைக்கு எடுத்து குற்றப்பத்திரிகை நகல்களை சம்பந்தபட்டவர்களுக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். விரைவாக விசாரணையை நடத்தி 6 மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டுமென திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் விரைவான விசாரணை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை என்றும், தேவையில்லாமல் வழக்கை ஒத்திவைப்பதை யாரும் உரிமையாக கோர முடியாது என உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார். நியாயமான காரணங்களுக்காக வழக்குகள் ஒத்திவைக்கபடலாம் என்றும், இயந்திரத்தனமான, வழக்கமான நடைமுறையாக வழக்குகள் ஒத்திவைக்கப்படக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com