நரிக்குறவர்களுக்கு பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவு
வேலூர் மாவட்டம் கீழ்வடுங்கன்குட்டை பகுதியில் சாலையோரம் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் கீழ்வடுங்கன்குட்டை பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சாலை ஓரங்களில் 35க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இந்நிலையில், அந்த இடத்தின் உரிமையாளர், நரிக்குறவர்களை அங்கிருந்து காலி செய்ய வலியுறுத்தியதன் அடிப்படையில், ஒரே நாளில் காவல்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து இவர்களின் குடிசைகளை அகற்றியுள்ளனர். இந்நிலையில், ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், கீழ் வடுவங்கன்குட்டையில் உள்ள நரிக்குறவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை வசதி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில், அரசின் சலுகைகள் எதுவுமே தங்களுக்கு கிடைப்பதில்லை என வேதனையுடன் கூறும் நரிக்குறவர்கள், அரசு தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கினால், அது தங்களின் உரிமைகளைப் பெற ஏதுவாக அமையும் என தெரிவிக்கின்றனர்.