துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த அவதூறு வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பரப்புரை தொடங்கியிருக்கிறார். அவர் இந்த மாத முதல் வாரத்தில் மண்ணிச்சநல்லூர் பரப்புரையில் பேசியபோது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், இதை தான் நிரூபிக்க தயாராக இருப்பதாகவும், தன்மீது வழக்கத் தொடர முடிந்தால் தொடருங்கள் என்றும் சவால் விடுத்திருந்தார்.
இதனால் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்குத் தொடரப்பட்டது. அதில், உதயநிதியின் பேச்சு குறித்தும், இதுபோன்ற வழக்குகளில் தன்னை தொடர்புபடுத்தி பேசுவது குறித்து தடைவிதிக்கவேண்டும் என்ற இடைக்கால கோரிக்கையும், இதுபோல தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.