”சிறையில் அடைத்து குறுகிய காலமே ஆகியுள்ளது” - மீரா மிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி

”சிறையில் அடைத்து குறுகிய காலமே ஆகியுள்ளது” - மீரா மிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி

”சிறையில் அடைத்து குறுகிய காலமே ஆகியுள்ளது” - மீரா மிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆகஸ்ட் 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகஸ்ட் 14 ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலால், கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய போது, வாய் தவறி பட்டியலின சமுதாயத்தை பற்றி பேசியதாகவும், பிறகு தான் பேசியது தவறு என தெரிந்ததும், தான் பேசியது தவறு என தான் குறிப்பிட்டதாகவும் மீரா மிதுன் தெரிவித்துள்ளார். ஆனால், தான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக  புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், பட்டியலின மக்களோடு தான் நட்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில் தன்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம்  எனவும் மனுவில் இருவரும் உத்தரவாதம் அளித்துள்ளனர். 
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதரார் பேச்சு சமுதாயத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் மோதலை தூண்டும் விதமாகவும் உள்ளது. தொடர்ந்து இதேபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். மீரா மிதுன் மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரின் ஆண் நண்பருடன் இணைந்தே, இந்த வீடியோக்களை இணையதளத்தில் அவர் பதிவேற்றம் செய்து வருகின்றார். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது. இவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
அதேபோல புகார்தாரரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு சார்பிலும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி செல்வகுமார், புலன்விசாரணை ஆரம்ப நிலையிலேயே உள்ளதாகவும், சிறையில் அடைத்து மிகக்குறுகிய காலமே ஆகியுள்ளதாலும் ஜாமீன் வழங்க முடியாது என கூறி இருவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com