மதுரை பழங்காநத்தத்தில் ரயில் தண்டவாளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை - போடி இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழங்காநத்தம் அருகே வசந்தம் நகரில் தண்டவாளப் பணிகள் நடக்கும் இடத்தில் இன்று நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. தண்டவாளம் அருகே உள்ள தடுப்புச்சுவரை ஒட்டிய இடத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் சிறிது நேரத்திற்கு அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ரயில்வே மற்றும் சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு வல்லுநர்களும் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடிகுண்டு சிதறல்கள் சேகரிக்கப்பட்டன. தென் மண்டல காவல்துறை தலைவர் சண்முகராஜேஸ்வரன் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து குண்டு வைத்தது யார்? எதற்காக வைத்தார்கள்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.