\
"குக்கர் சின்னம் ஒதுக்குமாறு உத்தரவிட முடியாது" உச்சநீதிமன்றம்

"குக்கர் சின்னம் ஒதுக்குமாறு உத்தரவிட முடியாது" உச்சநீதிமன்றம்

"குக்கர் சின்னம் ஒதுக்குமாறு உத்தரவிட முடியாது" உச்சநீதிமன்றம்
Published on

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்குமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அது ரத்து செய்யப்பட்டது. அப்போது திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் வகையில், தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்குமாறு உத்தரவிட முடியாது என தெரிவித்துவிட்டது. அதேசமயம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கலாமா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.

இதுமட்டுமில்லாமல் இரட்டை இலை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கை 4 வாரத்திற்குள் முடிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் உயர்நீதிமன்ற வழக்கு முடிக்கப்படவில்லை எனில் குக்கர் சின்னம் பற்றி ஆணையம் முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

முன்னதாக இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்திருந்தது. பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்நீதிமன்றம் கூறியுள்ளதால் அது டிடிவி தினகரனுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com