திருச்சி லால்குடியில் வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயன்ற பெண் சுயேச்சை வேட்பாளர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் 45 ஊராட்சி 25 ஒன்றியம் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சி லால்குடி 20 வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட செல்வராணி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் குமுலூர் வேளாண்மை பொறியியல் கல்லூரியில் புகுந்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
மேலும் வாக்குப்பதிவின்போது மதியத்திற்கு மேல் என்னுடைய சின்னம் இல்லை எனவும் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன் எனவும் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை முடிப்பதிலேயே குறியாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து போலீசார் அவரை அப்புறப்படுத்த முற்பட்டனர். அப்போது போலீசாருக்கு செல்வராணிக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார் செல்வராணி மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து செல்வராணியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.