நாட்டில் பல மாநிலங்களில் மத அடிப்படையில் கலவரங்கள், வன்முறைகள் நடந்து வரும் சூழலில் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மதம் தொடர்பான விவகாரங்களில் சிறு கடினமான வார்த்தைகளை உபயோகித்தாலும் அது பெரும் பிரச்சனையாக உருமாறும் சூழல் உள்ளது. சிறும்பான்மை மக்கள் பாதுகாப்பும், பொது அமைதியும் பாதிக்கப்படக்கூடாது என அனைத்து தரப்பினரும் மிக கவனமாக நாட்களை கடந்து வருகின்றனர்.
தற்போதுள்ள இணைய யுகத்தில் ஓரிடத்தில் நடப்பது அடுத்த நொடி உலகம் முழுதும் காணும் சூழலில் ஒரு மாநிலத்தில் நடக்கும் கலவரங்கள் மற்ற மாநிலங்களுக்கும் பரவும் சூழல் உள்ளது. பல மாநிலங்களில் நிலவும் பதற்றமான சூழல் தமிழகத்தில் இல்லை என்றாலும் மிகக் கவனமுடன் செயல்படும் காலம் இது என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், அனைத்து சமூக மக்களும் உணர்ந்தே உள்ளனர். ஏனெனில் கண் முன் நடப்பவைகளை நாம் காண்கிறோம். மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமென்றால். ஹரியானாவில் இரு மதங்களுக்கு இடையில் உள்ள விவகாரம். எதும் தாழ்ந்ததும் அல்ல, உயர்ந்ததும் அல்ல. அனைத்து கலவரங்களும் கேட்பது உயிர்பலிகளே.
சில தினங்கள் முன் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உபயோகித்த வார்த்தைகள் மிகப்பெரிய பேசு பொருளானது. பல்வேறு தரப்புகளில் இருந்தும் சீமான் பேச்சிற்கு கண்டனங்கள் வந்தன. இந்நிலையில் காவல் ஆய்வாளர். ஒருவர் மதம் தொடர்பான கருத்துகளை பேசியது இணையதளங்களில் வேகமாக பரவியது.
புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் மதம் தொடர்பான கருத்துக்களை ஆடியோவாக பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் மதம் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டதாக போக்குவரத்து ஆய்வாளர் ராஜேந்திரனை தற்காலிக பணியிட நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து க்ரேட்டர் சென்னை போலீஸ் தனது ட்விட்டர் பிரிவிலும் காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. அதில், மதரீதியாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த காவல் ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் என தெரிவித்துள்ளது.