இன்று விஜய் பதவியேற்பு இல்லை.. வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ்.. என்ன தான் நடக்கிறது?
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, காங்கிரஸ் ஆதரவுடன் 112 இடங்களை பெற்றிருந்தும், ஆளுநர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காததால் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. முதல்வருக்கு வழங்கப்படும் உயர் பாதுகாப்பு, கான்வாய் வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் விஜயிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டதால், தவெக தொண்டர்கள் ஏமாற்றத்திலும் அச்சத்திலும் உள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூப்பித்து ஆட்சியமைக்க முடியாமல் இழுபறியில் இருந்துவருகிறது. இந்தசூழலில் திமுக-அதிமுக இணைந்து ஆட்சியமைக்க போகிறது என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், மறுபக்கம் விஜய்க்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 தொகுதிகளை வைத்திருக்கும் காங்கிரஸ் ஆதரவு கிடைத்துள்ளதால் தவெக வசம் 112 தொகுதிகள் இருக்கும் சூழலில், நேற்று மாலை தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார் தவெக தலைவர் விஜய். இதனால் இன்று காலை 11 மணிக்கு விஜய் முதல்வராக பதவியேற்பார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போதுவரை ஆட்சியமைக்க ஆளுநரிடமிருந்து அழைப்பு வரவில்லை என்றசூழலே இருந்துவருகிறது.
இந்நிலையில் விஜய்க்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பும் திரும்பப்பெறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, விஜய் தலைமையில் ஆட்சியமைக்க காத்திருக்கிறது. இந்நிலையில் முதல்வருக்கு வழங்கப்படும் கான்வாய் வாகனங்கள் உள்ளிட்ட உயர் பாதுகாப்பு தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இன்னும் பெரும்பான்மை கிடைக்காததால் உயர் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என காவல்துறை தரப்பில் விஜயிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர், உயர் பாதுகாப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து கான்வாய் வாகனங்கள் இன்றி விஜய் தனியாக சென்றுள்ளார்.
ஒருபக்கம் ஆளுநர் பதவியேற்க அழைக்கவில்லை, உயர் பாதுகாப்பு வாபஸ், மறுபக்கம் பெரும்பான்மை நிரூபிப்பதில் சிக்கல் என குழப்பான சூழல் உருவாகியிருப்பதால் தவெக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

