குவியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்: நீதிபதிகள் ஆதங்கம்
நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்குகள் குவிந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆதங்கப்பட்டனர்.
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் கட்டுவதற்காக 12 பேரிடம் கையகப்படுத்தப்பட்ட நிலம், வேறொன்றுக்காக பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நிலம் ஒப்படைக்கப்படாததால், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலர், முதன்மை செயலாளர், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. சம்பந்தப்பட்ட மூவரையும் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனையும் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி இன்று ஆஜராகிய கிரிஜா வைத்தியநாதனிடம், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குவிந்து வருவதை உணர்த்தவே நேரில் ஆஜராக உத்தரவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

