திருச்சி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே சந்திப்பு மேம்பால கட்டுமான பணிகள் தொடக்கம்

திருச்சி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே சந்திப்பு மேம்பால கட்டுமான பணிகள் தொடக்கம்
திருச்சி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே சந்திப்பு மேம்பால கட்டுமான பணிகள் தொடக்கம்

திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலம் கட்டுமானத்தின் பணிகளை நிறைவு செய்ய 8 ஆண்டுகளுக்கு பிறகு பாதுகாப்புத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தடைபட்டுக் கிடந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி நிறைவடைந்தால் திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பு, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆகிய வழித்தடங்களில் வரும் பேருந்துகள், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை உருவாக்காத சூழல் விரைவில் ஏற்படும். இந்த பாலம் திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பால கட்டுமான பணிகள், கடந்த 2013-14 ஆம் நிதியாண்டு ₹ 81.40 கோடி திட்டமதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருச்சி இரயில்வே சந்திப்பு, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதற்கு தேவையான நிலத்தை ரயில்வே நிர்வாகத்திடம் இருந்தும், பொதுமக்களிடம் இருந்தும், மாநில நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. மேலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதிக்கு தேவையான 66 சென்ட் (0.66 ஏக்கர்) நிலம் பாதுகாப்புத் துறையின் கைவசம் இருந்தது. அந்த இடத்தை மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க, பாதுகாப்புத் துறை அனுமதி வழங்காமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்தநிலையில் அதன் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 16.07.2018 அன்று திறந்துவைத்தார்.

எஞ்சிய பாலப் பணிகள் கடந்த 8 ஆண்டுகளாக பாதுகாப்புத் துறை அனுமதி கிடைக்காமல் முடங்கிக்கிடந்தது. சமிபத்தில் பாலத்தின் எஞ்சிய பணிகளுக்கு தேவையான நிலத்தின் மதிப்பு 8 கோடியே 45 லட்சத்து 72 ஆயிரத்து 961 ரூபாய் என பாதுகாப்புத்துறை நிர்ணயம் செய்தது. சம்மந்தப்பட்ட நிலத்தை, மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க பாதுகாப்புத் துறை நிபந்தனை விதித்தது.

அந்த இடத்தின் மதிப்பிற்கு இணையான நிதியில் பாதுகாப்புத் துறைக்கு தேவையான புதிய கட்டுமான பணிகளை , மாநில நெடுஞ்சாலை துறை செய்துக் கொடுக்க வேண்டும் என்ற பாதுகாப்புத்துறை நிபந்தனை மாநில அரசு ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை அகற்றிவிட்டு, 8 ஆண்டுகளாக தடைபட்டுக் கிடந்த திருச்சி இரயில்வே சந்திப்பு மேம்பாலம் கட்டுமான பணிகளை இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com