நாங்குநேரி தொகுதி வேட்பாளரை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்..!
நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்கிறது.
நாங்குநேரி , விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விண்ணப்பித்த அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் விவரம் கட்சியின் தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்க உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில், காமராஜ் நகர் தொகுதி என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதே தொகுதியில் போட்டியிட பாஜக இன்று நேர்காணல் நடத்துகிறது. இதனிடையே நாங்குநேரி தொகுதியில் இதுவரை 2 பேரும், விக்கிரவாண்டியில் 4 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.