நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் அதிமுக தரப்பில் இருந்து தங்களிடம் யாரும் ஆதரவு கோரவில்லை என காங்கிரஸ் கொறடா விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது பற்றி, அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் இந்தக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது செயல்பட வேண்டிய நிலை குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே அதிமுக தரப்பில் இதுவரை யாரும் தங்களிடம் ஆதரவு கோரவில்லை எனவும் திமுக ஆட்சி அமைத்தால் ஆதரவு அளிப்போம் என்றும் விஜயதாரணி கூறியுள்ளார். திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், தனது நிலைப்பாடு குறித்து இன்று மாலை முடிவு அறிவிப்பார் என தெரிகிறது.