இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு காங்கிரசின் தலித் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, திருப்பனந்தாள் காவல்துறையினர் ரஞ்சித் மீது கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் மனுத்தாக்கல் செய்தார். அதில் நிலமற்ற டெல்டா மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் "செந்தமிழ் நாட்டு சேரிகள்" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளவை குறித்தே தாம் பேசியதாக தெரிவித்துள்ளார்.
உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ள ரஞ்சித், தனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் பா.ரஞ்சித்துக்கு காங்கிரசின் தலித் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலித் காங்கிரஸ் பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் பா.ரஞ்சித்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதீயத்துக்கு எதிரான தொடர் முயற்சி மிகச் சிறப்பானது என பா.ரஞ்சித்தை பாராட்டியும், அவரது பக்கம் நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.