
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நேற்று திமுக மகளிர் உரிமை மாநாடு நடத்தியுள்ள நிலையில் திமுகவிற்கு மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு எந்த வித தகுதியும் இல்லை. பிரதமர் மோடி எந்தவித பின்னணியும் இல்லாமல் மகளிர்காக இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளார்.
காங்கிரஸ், கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்ப்பதில் குறிக்கோளாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து திமுகவினர் காவல் துறையை மிரட்டியுள்ளனர். பாஜக வளர்ந்திருப்பதாக இவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்ததை பார்க்க முடிந்தது. ஆட்சியில் இருக்கும் கட்சியை கேள்வி கேட்பது எங்களின் கடமை.
விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என உதயநிதி தெரிவித்தால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அவர் ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார்.
கூட்டணி பேச்சு வார்த்தையை தேசிய தலைவர்கள் தான் மேற்கொள்வார்கள். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது மட்டுமே என் குறிக்கோள்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒற்றை ஆட்சி குறித்து கானல் நீர் போல் ஒரு கனவு கண்டு அவரே பயந்து கொள்கிறார். தீவிரவாதத்தை தீவிரவாதமாகவே பாஜக பார்க்கிறது. ஒரு மதமாக பார்க்கவில்லை. வருகிற ஐந்து மாநில தேர்தல்களில் இந்தியா கூட்டணி முழுவதும் சேர்ந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது.
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிப்பதற்கு ஆளுநர் கையெழுத்து போட மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பீக்-அவர் மின் கட்டணம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளை குழியில் போட்டு மூட போகிறது. தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது மைக் நிறுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.