திருச்சி அருகே மதுபோதையில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேரின் மண்டை உடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி, வாழவந்தான் கோட்டை பகுதியில் உள்ள பெரியார் நகரில் மரத்திலிருந்து தேங்காய் பறித்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பிரச்சனையாக மாறவே, இரு பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் மூன்று பேருக்கு மண்டை உடைந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் துவாக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
மோதலில் ஈடுபட்ட இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 13 பேர் விசாரணைக்காக காவல் நிலையத்தில் உள்ளனர். மோதலில் ஈடுபட்ட அனைவரும் மது போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.