" 'அண்ணாத்த' படப்பிடிப்பைவிட பாதுகாப்பானதே!" - ரஜினியை நெருக்கும் விசாரணை ஆணையம்
" 'அண்ணாத்த' படப்பிடிப்புத் தளத்தைவிட விசாரணை ஆணைய அலுவலகம் பாதுகாப்பானதுதான்" என்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ஆஜராக வேண்டுமென ஒரு நபர் ஆணையத்தால் சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார். ரஜினிகாந்திடம் கேட்கப்பட கூடிய கேள்விகள் அடங்கிய சீலிடப்பட்ட கவரை, ஆணையம் வழங்கி உள்ளதாக ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் விளக்கம் அளிக்காததால், கடந்த டிசம்பர் மாதம் ஆணையம் தரப்பில் இருந்து ஜனவரி 19-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. கொரோனா பாதுப்பு காரணமாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதை ரஜினி தவிர்த்தார் எனக் கூறப்பட்டது. அதேநேரத்தில், தற்போது 'அண்ணாத்த' படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்துதான், விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், "கொரோனா வரும் என்ற அச்சமின்றி நடிகர் ரஜினிகாந்த், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைக்குழு முன் ஆஜராகலாம். ஏனெனில், 'அண்ணாத்த' படப்பிடிப்புத் தளத்தைவிட விசாரணை ஆணைய வளாகம் பாதுகாப்பானதுதான்.
'அண்ணாத்த' படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் கூட்டத்தைவிட விசாரணை ஆணையத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைவுதான். இந்த விசாரணை, ஐந்து நபர்கள் உள்ள ஓர் அறையில் கேமரா முன்னிலையில்தான் நடைபெறும். எனவே, விசாரணை கமிஷனின் வளாகம் 'அண்ணாத்த' படப்பிடிப்புத் தளத்தைவிட பாதுகாப்பானது" என்று கூறியிருக்கிறார். இதனால், நடிகர் ரஜினிக்கு புது சிக்கல் உருவாக்கி இருக்கிறது. அவர் எப்படியும் இந்த முறை விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, "துப்பாக்கிச் சூடு நடந்தபோது போராட்ட அரங்கிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரை ஆணைக்குழு விசாரிக்கும். 26-வது அமர்வின் போது, வரவழைக்கப்பட்ட 45 பேரில் 31 பேர் விசாரிக்கப்பட்டனர்" என்று அருள் வடிவேல் தெரிவித்தார்.