தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் மாற்றம் ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க தயார் என கொலிஜியம் அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி, மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான பரிந்துரைகளை கொலிஜியம் அமைப்பு சமீபத்தில் முன் வைத்தது. ஆனால், இடமாற்றம் வேண்டாம் என உச்சநீதிமன்றத்திடம் நீதிபதி தஹில் ரமாணி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தனது பதவியை தஹில் ரமாணி ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனிடையே தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதிகள் இடமாற்றம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீதிபதிகள் இடமாற்றம் ஏன் என்பது குறித்து தேவை ஏற்பட்டால் தகவல்களை வெளியிட தயார் என கொலீஜியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறப்பான நிர்வாகத்திற்காக தேவையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டே நீதிபதிகள் இடமாற்றம் நடைபெறுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.