நெல்லை மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து பணகுடி மனோ கல்லூரியின் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பயிலும் மாணவர்கள், தேர்வுக்கட்டணமாக 54 ரூபாய் செலுத்தி வந்தனர். தற்போது இது 90 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல எம்.ஏ மற்றும் எம்.எஸ்சி போன்ற முதுநிலை மாணவர்களின் கட்டணம் 106 ரூபாயில் இருந்து 150 ரூபாயாகவும், எம்ஃபில் மாணவர்களின் கட்டணம் 226 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் திருமலை நம்பி கூறுகையில், தேர்வு கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும். இல்லை என்றால் பல்கலை நிர்வாகத்தை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.