திடீர் மயக்கம்.. போதை பொருளால் பறிபோன கல்லூரி மாணவியின் உயிர்? - சென்னையில் பகீர் சம்பவம்

திடீர் மயக்கம்.. போதை பொருளால் பறிபோன கல்லூரி மாணவியின் உயிர்? - சென்னையில் பகீர் சம்பவம்
திடீர் மயக்கம்.. போதை பொருளால் பறிபோன கல்லூரி மாணவியின் உயிர்? - சென்னையில் பகீர் சம்பவம்

சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் படித்துவந்த பிகாம் இரண்டாம் ஆண்டு மாணவி ரூத்பிரின்சி போதை மாத்திரை உட்கொண்டு இறந்து விட்டதாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் மேற்கு சாலையில் உள்ள உதயம் காலனி வசித்துவருபவர் சாம்யுவராஜ். இவரது மகள் ரூத்பிரின்சி குயின் மேரிஸ் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரியில் இருந்த அவருக்கு கடந்த மாதம் 8ஆம் தேதி திடீர் என்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கம்தானே என்று நினைத்து சாதாரணமாக விட்டு விட்டனர். பிறகு மீண்டும் சோர்வு ஏற்பட்டு மயக்கம் வந்துள்ளது. அதன்பிறகு 9 தேதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் ரூத்பிரின்சியின் உடல்நிலை மோசமடைந்ததால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து உள்நோயாளியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 22.5.2022 அன்று சுமார் இரவு 9 மணியளவில் ரூத்பிரின்சி இறந்துவிட்டார்.

சிகிச்சைக்கு முன்பு ரூத்பிரின்சி தான் படித்த கல்லூரியில் தன்னுடன் பயின்று வரும் மாணவி ஒருவர் மூலம் தனக்கு போதை மாத்திரை கிடைத்ததாக தெரிவித்து இருக்கிறார். அதனை சாப்பிட்ட பிறகு மயக்கம், சோர்வு, தலைசுற்றல் இருந்ததாகக் கூறியுள்ளார். ரூத்பிரின்சி உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்திற்கான காரணம் பற்றிய ரூத்பிரின்சியின் உள்ளுறுப்புகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகள் நிலுவையில் உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ரூத்பிரின்சி இறப்பு குறித்து அவரது பெற்றோர் சாம்யுவராஜ் முதல்வர் தனி பிரிவு, காவல் நிலையம் என அனைத்து இடங்களிலும் புகார் செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது, என் கவனத்திற்கு வந்த உடனே துறை ரீதியாக அறிக்கை கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கல்ல்லூரியில் போதை மாத்திரையை யாரும் பயன்படுத்தவில்லை. அதனை தான் உறுதி செய்துவிட்டதாக தெரிவித்தார். ஒரு மாணவி கல்லுரி வளாகத்தில் இருக்கும் போதுதான் நாங்கள் பொறுப்பு ஏற்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com