பலரின் பசிதீர்த்த மாமனிதர்: காலமானார் 'சாந்தி சோசியல் சர்வீஸ்' சுப்ரமணியம்

பலரின் பசிதீர்த்த மாமனிதர்: காலமானார் 'சாந்தி சோசியல் சர்வீஸ்' சுப்ரமணியம்

பலரின் பசிதீர்த்த மாமனிதர்: காலமானார் 'சாந்தி சோசியல் சர்வீஸ்' சுப்ரமணியம்
Published on

கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் இன்று காலை காலமானார்.

சாந்தி சோஷியல் சர்வீஸ் என்றால் கோவையில் அனைவருக்குமே தெரியும். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பிரபலமான பெயர் சாந்தி சோஷியல் சர்வீஸ். காரணம், பெயருக்கேற்பவே செய்து வந்த சோஷியல் சர்வீஸ் தான். உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தது சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனம். மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய்,

மருந்தகங்களில் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை என ஏழை மக்களுக்கு பெரும் உதவியார் இருந்தது சாந்தி சோஷியல் சர்வீஸ்.

குறிப்பாக இந்நிறுவனத்தின் உணவகம் பலருக்கு குறைந்த விலையில் பசியாற்றியது. கோவை சிங்கநல்லூரில் வாடகைக்கு இடம் தேடிய இளைஞர்கள் பலர், அதற்கு முக்கிய காரணமாக இருந்தது சாந்தி சோஷியல் சர்வீஸ். ரூ.25க்கு முழு சாப்பாடு, ரூ.5-15க்குள் டிபனை முடித்துவிடலாம். டீ ,காபி எல்லாம் ரூ.5க்கு கிடைக்கும். ரூ.30 இருந்தாலே போதும் வயிராற ஒரு வேளை சாப்பிட முடியும். ஜிஎஸ்டி வந்தபோதும் கூட விலையை ஏற்றாமல் விலையை குறைத்தது என்பது வேறுகதை. ரூ.10க்கே மதிய சாப்பாடு, ரூ.5க்கு டிபன் என அனைவரையும் வாயடைக்கச் செய்தது சாந்தி சோஷியல் சர்வீஸ். இப்படி மக்களின் மனங்களை கொள்ளைகொண்ட சாந்தி நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியம்.

கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தார்.

1996-ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார்.இந்த அமைப்பின் அறங்காவலராக சுப்பிரமணியம் இருந்தும் வந்தார்.சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது. ஆனால் சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து மக்களுக்கு சேவை செய்தார். ஆனால் சுப்பிரமணியனை யாருக்குமே தெரியாது. குறைந்த விலையில் பசியை போக்கும் மாமனிதரை உலகம் கண்டுகொள்ள வேண்டுமென ஊடகங்கள் அவரைத் தொடர்புகொண்டன. ஆனால் அன்பால் மறுத்துவிட்டார் சுப்பிரமணியன்.

தான் செய்யும் சேவைக்கு விளம்பரம் வேண்டாம் என ஊடகங்களில் முகத்தை காட்டாமல் இறுதி வரை உறுதியாக இருந்த சுப்பிரமணியம் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். பலரின் பசியைப் போக்கிய அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com