தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரிடம் நில மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அவர்களது மகனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம், சவிதா தம்பதி கோவை ஆர்.எஸ்.புரம். பகுதியில் இருந்த தங்களுக்கு சொந்தமான இடத்தை, 1997ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான, அருண் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். பின்னர் விற்பனை செய்த இடத்தின் பத்திரத்தை போலியாக தயாரித்து திருப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் அடமானம் வைத்து 1 கோடியே 20 லட்ச ரூபாய் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், விற்பனை செய்யப்பட்ட இடத்தின் ஆவணங்களை மறைத்ததாக, இடத்தின் உண்மையான உரிமையாளர் அருண், கோவை மாவட்ட இணை சார்பதிவாளரிடம் புகார் அளித்தார். விசாரணையில், பிணையில் வந்த தம்பதி தங்களது மகன் பிரபு உதவியுடன், அதே இடத்தின் பத்திரத்தை மீண்டும் போலியாக தயாரித்து திருப்பூர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சேலத்தில் தலைமறைவாக இருந்த ராஜமாணிக்கம், சவிதா தம்பதியை கோவை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த அவர்களது மகன் கனடா நாட்டிற்கு தப்பி சென்றுள்ளதால், அவரையும் மீட்டு கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது.