ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்

ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்

ஆரணியில் 5 ஸ்டார் பிரியாணி சென்டர் என்ற பெயரில் செயல்படும் உணவகத்தில் தம்பதியர் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தரமற்ற பிரியாணி வழங்குவதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் மணிக்கூண்டு அருகே இயங்கி வரும் 5 ஸ்டார் பிரியாணி சென்டர்  என்ற உணவகத்தில் நேற்று நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி ஜான்சி ராணி ஆகியோர் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் சிக்கன், மட்டன் பிரியாணி மற்றும் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது மூர்த்தி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடையின் மேலாளரிடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்காததால் மூர்த்தி ஆர்டர் செய்த உணவுகளுக்கு பில் கொடுத்துவிட்டு இதுகுறித்து ஆரணி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். ஆனால், இதுவரை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த மே மாதம் இதே உணவகத்தில் தந்தூரி பிரியாணி சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், தரமற்ற உணவுகளை வழங்கி வரும் இந்த உணவகத்தின் மீது உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்ந்து தரமற்ற உணவுகளை வழங்கி வரும் உணவகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com