"முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்" - முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகனும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில்,” தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட, அறிவுச் சூரியனாய் வந்துதித்த தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்! முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் #செம்மொழிநாள்!
ஐந்து முறை முதலமைச்சராகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரலாறு பல படைத்து - இந்தியாவுக்கே வழிகாட்டும் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 50 ஆண்டுகள் வழிநடத்தி, ஒளியும் நிழலும் ஒருசேர வழங்கிய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் எனப் பெருமை கொள்வோம்!” என்று தெரிவித்துள்ளார்.