இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சாதனை படைத்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து சரியாக 16 நிமிடத்தில் சந்திரயான்-2 விண்கலம், பூமியின் வட்டப் பாதையை சென்றடைந்தது. இதனையடுத்து விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சந்திரயான்-2 விண்கலத்தை நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்தியிருப்பது, இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் திறன் பெற்றிருக்கும் வெகு சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியதற்காக விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்தச் சாதனை, இளம் உள்ளங்களை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.