ஆந்திராவில் சடலமானோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அரசு நிதி!
ஆந்திர ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் உள்ள ஏரி ஒன்றில், தமிழகத்தை சேர்ந்த கருப்பண்ணன், ஜெயராஜ், சின்னபையன், சி.முருகேசன் மற்றும் அ.முருகேசன் ஆகிய ஐந்து பேரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு துயரம் அடைந்ததாக கூறியுள்ளார். அவர்களின் குடுத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களையும் தமிழக அரசு சார்பில் சொந்த ஊர்களுக்கு கொண்டு வர உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக, கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு சேலம் மாவட்ட காவல் துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்று செல்லும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.