ஒகி பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை: முதல்வர் பழனிசாமி
ஒகி புயல் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஒகி புயல் பாதிப்பு குறித்து கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ஒகி புயலால் கன்னியாகுமரியில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால், அதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல் புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.744 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.5,255 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பிரத்யோக கடற்படை நிலையம் ஒன்றை அமைக்கவும், அதில் ஹெலிகாப்டர்கள் இறங்குதள வசதி அமைக்கவும் கோரியுள்ளோம்” என்று கூறினார்.
மேலும், “கன்னியாகுமரி மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தொலைத்தொடர்பு வசதிகள், குளிர்ப்பதனக் கிடங்கு, மீன் பதப்படுத்தும் பூங்கா போன்ற வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், சென்னையில் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாதவாறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.4,047 கோடி வழங்குமாறும் கேட்டுள்ளோம். இதன்படி, ஒகி புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை சீரமைக்க மொத்தம் ரூ.9,302 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கான அறிக்கையையும் வழங்கியுள்ளோம். பிரதமரும் அறிக்கையை பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.