“ஜெயலலிதா எந்த ஆவணத்தையும் கட்சியினரிடம் பெறவில்லை” - முதலமைச்சர் பழனிசாமி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எந்த ஆவணத்தை கட்சி நிர்வாகிகளிடம் பெற்றதில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித் துள்ளார்.
சென்னையை ராயப்பேட்டையில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். தெகல்கா இணையதள ஊடக முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் நேற்று டெல்லியில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை சம்பந்தபடுத்தி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்தச் செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், அவர்களின் பின்புலத்தில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடர்பாக நேற்றைய தினமே சென்னை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு, வழக்குப்பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். கொடநாடு எஸ்டேட்டில் அன்றைய தினம் நடந்த சம்பவம் தொடர்பாக 10பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் குற்றவாளிகள் இதுவரை 22 முறை நீதிமன்றத்திற்கு சென்று வந்துள்ளனர். நீதிமன்றத்தில் எதுவும் சொல்லாத அவர்கள், தற்போது புதிதாக ஒரு செய்தியை சொல்லி வழக்கை திசை திருப்பப் பார்க்கின்றனர். வருகிற பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அவர்களுக்கு பின்னால் யார்? யார்? உள்ளனர் என்பது, விரைவில் கண்டறியப்படும்.
அதுமட்டுமின்றி அந்தக் குற்றவாளிகள் மீது மோசடி, போக்ஸோ உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு செய்தியை தெரிவித்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்சி நிர்வாகிகளிடம் ஆவணங்களைப் பெற்று கொடநாட்டில் வைத்திருந்ததாகவும், அந்த ஆவணங்களை எடுக்க அவர்கள் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா எந்த ஒரு நிர்வாகியிடம் எந்த ஒரு ஆவணத்தை இதுவரை பெற்றதில்லை. அவரின் பெயரை கெடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுகவை பொறுத்தவரையில் எதாவது ஒரு வழக்கை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். நேரடியாக அரசியலில் எதிர்கொள்ள திராணியற்றவர்கள், இது போன்ற குறுக்கு வழியை கையாண்டுள்ளனர். இதில் அரசியல் பின்புலம் உள்ளது. உண்மை வெளிச்சத்திற்கு வரும்” என்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோடநாடு எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் காவலாளி பகதூர் கொல்லப்பட்டார். கொள்ளையில் ஈடுபட்ட ஷயான் என்பவரின் மனைவி, குழந்தை உட்பட 5 பேர் மர்மமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜும் விபத்தில் உயிரிழந்தார். மர்மமான முறையில் நடந்த இந்த உயிரிழப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ், புலனாய்வு மேற்கொண்டு அதன் வீடியோவை நேற்று பத்திரி கையாளர் வெளியிட்டார். அதில் அமைச்சர்களை எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, இங்குள்ள ஆவணங்கள் கொள் ளையடிக்கப்பட்டதாகவும் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும் இந்த கொள்ளைக்காக, கனகராஜ் 5 கோடி ரூபாய் பெற்றார் எனவும் கூறப்பட்டிருந்தது.