கஜா நிவாரண நிதிக்கு உடனடியாக ஆயிரம் கோடி - முதல்வர் உத்தரவு

கஜா நிவாரண நிதிக்கு உடனடியாக ஆயிரம் கோடி - முதல்வர் உத்தரவு
கஜா நிவாரண நிதிக்கு உடனடியாக ஆயிரம் கோடி - முதல்வர் உத்தரவு

கஜா புயல் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.1,000 கோடியை உடனடியாக விடுவிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயல் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், அனைத்து துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் நாளை பார்வையிடவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனையில், சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவது, சேத மதிப்பீடு விவரம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  

இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கஜா புயல் 16.11.18 அன்று 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றினாலும், கன மழையினாலும் பெரும் பாதிப்புகள்  ஏற்பட்டன. 

மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைத்து, இயல்பு நிலை திரும்பிட பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 514 பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 2,51,674 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகின்றன. 

இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர, முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டியும், சேலையும் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். 

மேலும், கூடுதலாக 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள், வீடுகளை இழந்தவர்கள், மீன்பிடி கலன்கள், வல்லம், கட்டுமரம் சேதமடைந்ததனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு உடனடி வாழ்வாதார நிவாரணமாக குடும்பம் ஒன்றுக்கு தலா 5,000 ரூபாயும், 3 துணிமணிகள், பாத்திர பண்டங்கள் ஆகியவை வாங்க குடும்பம் ஒன்றுக்கு 3,800 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 46 நபர்களின் குடும்பத்தினருக்கு  நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க ஏற்கனவே நான் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும்,20 காளை மாடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 19 கன்றுகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும், 1181 ஆடுகளுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 14,986 கோழி மற்றும் பறவைகளுக்கு தலா 100 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

பாதிக்கப்பட்ட கிராம பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 2018 டிசம்பர் மாதத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, நவம்பர் மாதமேஅதாவது தற்போதே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்பு துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

முழுவதும் சேதமடைந்த குடிசை வீடு ஒன்றுக்கு 10,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு 4,100 ரூபாயும், வழங்க உத்தரவிட்டுள்ளேன். முழுவதும் சேதமடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதியதாக வீடு கட்ட உரிய நிதி உதவி வழங்கப்படும். 

தென்னை பயிருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூபாய் வழங்கவும், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு 500 ரூபாய் வழங்கவும், ஆக மொத்தம் ஒரு மரத்திற்கு 1100 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர, மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு 72,100 ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு 2,64,600 ரூபாய் பெறுவர்.

புயல் காரணமாக, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கடலுர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முதற்கட்ட கணக்கீட்டின்படி கட்டுமரங்கள், படகுகள், விசைப் படகுகள் போன்ற சுமார் 4,844 மீன்பிடி படகுகள், 5,550 மீன்வலைகள் மற்றும் 5,727 படகுகளின் எஞ்சின்கள் சேதமடைந்துள்ளன. 

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணமாக, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 20,000 ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு 85,000 ரூபாயும், பகுதி சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு 30,000 ரூபாய் வரையும், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 5 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும், வலைகள் மட்டுமே சேதம் அடைந்திருந்தால் 10,000 ரூபாயும், எஞ்சின் பழுது நீக்கம் செய்ய 5,000 ரூபாயும் வழங்கப்படும்.

மக்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு நிதி உதவி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு 1,000 கோடி ரூபாய் உடனடியாக விடுவித்திட உத்தரவிட்டுள்ளேன். 

தற்போது தமிழ்நாடு அரசால் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com