எடப்பாடியில் இன்று பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்
எடப்பாடி சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 6 முறை வெற்றி பெற்றது. அதில் நான்கு முறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 99 ஆயிரம் வாக்குகள் பெற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். பாமக இரண்டாவது இடத்தையும், திமுக மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இதனால் எடப்பாடி தொகுதி அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்பட்டது.
ஆனால், 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் சரணவன் தோல்வி அடைந்தார். அதிலும் முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியிலும், சொந்த ஊரான சிலுவம்பாளையத்திலும் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள், அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட அதிகமாக இருந்தது. இதனால், தற்பாது நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அவர் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தமிழகம் முழுவதும் அவரது பரப்புரையில் அனல் பறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.