சாலையில் நடந்து துண்டு பிரசுரங்கள் கொடுத்த முதலமைச்சர் : தேநீர் கடையிலும் ஒரு டீ..
தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல் இது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார். முன்னதாக, சேலம் கருமந்துறை வெற்றி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, பரப்புரையை பழனிசாமி தொடங்கினார்.
அப்போது, வீதியில் நடந்து சென்ற அவர், தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார். பின்னர், திறந்த வாகனத்தில் சென்று, சுதீஷுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார். பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும் என்பதால், பாரதிய ஜனதாவை தாங்கள் ஆதரிப்பதாக அவர் கூறினார். தர்மத்தை நிலைநாட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பரப்புரையின்போது, முதலமைச்சர் பழனிசாமியும், எல்.கே.சுதீஷும் அருகில் இருந்த கடைக்குச் சென்று தேநீர் அருந்தினர்.