கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புயலால் நூற்றுக்கணக்கான கன்னியாகுமரி மீனவர்கள் கடலில் சிக்கி காணமல் போயுள்ளனர். அவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தின் நீரோடி, மார்த்தாண்டம்துறை, வள்ளவிளை, இரவிப்புத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை உள்ளிட்ட 8 கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது, காணாமல் போன ஆயிரத்திற்கும் மேலான மீனவர்களை மீட்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறியுள்ளனர். சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ள போராட்டம் பல மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மீனவர்கள் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஆலோசனையில், மீனவர்களை தேடும் பணிகளை தீவிரப்படுத்தவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.