கனமழையால் நீலகிரியில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் வீடு இடிந்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இன்று நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் வீடு இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தனர். காட்டுக் குப்பை பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும் குருத்துக் குளி பகுதியைச் சேர்ந்த விமலா 38, சுசீலா 36 ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக இந்த இரண்டு நாட்களில் மொத்த 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.