அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி திடீர் ஆய்வு
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் பழனிச்சாமி இன்று எடப்பாடி பயணியர் மாளிகையில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திடீர் என சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மருத்துவமனையில் ஸ்கேன் மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதனையடுத்து ஒவ்வொரு சிகிச்சைப் பிரிவுகளாக சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முதலமைச்சர் சிகிச்சை விவரத்தைக் கேட்டறிந்தார். அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் நலமும் விசாரித்தார். இதனையடுத்து மகப்பேறு பிரிவுக்கு சென்ற முதலமைச்சர் இன்றைய தினம் பிறந்த குழந்தைகளை நேரில் பார்வையிட்டார். அப்போது குழந்தையின் தாயிடம் அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை முதலமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், அன்புடன் பேச வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் குறை கேட்டு மருத்துவமனைக்கு வேறு என்ன வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் கேட்டறிந்தார்.