அரசு மருத்துவமனைக்கு படையெடுத்த கர்ப்பிணி பெண்கள் - தேனியில் அதிகரித்த சுகப்பிரசவங்கள்
தேனி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் அதிகரித்துள்ளன.
கொரோனா பரவல் காரணமாக தேனி மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் முழூ வீச்சில் செயல்படவில்லை. அவசர கால சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் பெரும்பாலான மகப்பேறு பெண்கள் அரசு மருத்துவமனை நோக்கி படையெடுத்தனர். இதனால் தேனி அரசு மருத்துவமனையில் கூட்டம் குவிந்தது.
அங்கு மாதத்திற்கு 500 பிரசவங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அரசு மருத்துவனையில் 2697 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் 1508 நபர்கள் தனியார் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், 2697 பிரசவங்களில் 1945 சுக பிரசவங்களாக முடிந்துள்ளன.
மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 12 பிரசவங்களில், தாயின் கர்ப்ப பையில் கரு உருவாகாமல் சினை பையில் கரு உருவாகி அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்துள்ளது. ஆனால் அரசு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் அவர்களுக்கும் நல்ல முறையில் குழந்தைகள் பிறந்துள்ளது.
இது குறித்து அரசு பொது மருத்துவமனை முதல்வர் இளங்கோவன் கூறும் போது “ மக்கள் கூடுதலாக மருத்துவ மனைக்கு வருகை தருவதால் அவர்களை கவனிக்க கூடுதலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு வந்த அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் எவ்வித பாதிப்பின்றி குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக மேல் தட்டு, கீழ் தட்டு என அனைத்து மக்களும் மருத்துவ மனைக்கு வருகை தருவது ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.