சாலையில் சீன மருத்துவரின் உருவப்படம் : மதுரையில் விழிப்புணர்வு
மதுரையில் சீன மருத்துவர் லீ பென்லியாங்கின் உருவப்படத்தை சாலையில் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சாலையில் ஓவியங்கள் வரைந்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.,, அதனடிப்படையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஏற்பாட்டில் அவனியாபுரம் பிரதான சாலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டிருக்கிறது.
அதில் முதன்முதலில் கொரோனா வைரஸ் நோயை கண்டுபிடித்து, அதன் பாதிப்பால் மரணம் அடைந்த லீ வென்லியாங் என்ற சீன மருத்துவரின் புகைப்படம், விழிப்புணர்வுக்காக வரையப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் நோயினை கண்டுபிடித்து, அதன் பாதிப்பு குறித்தும் சீனா அரசுக்கு எச்சரிக்கை செய்தவர் என்ற வகையில் இந்த புகைப்படம் வரையப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த விடா முயற்சியுடன் பணியாற்றி இறுதியில் உயிரிழந்த அவரின் தியாகத்தையும், கடமையும் போற்றி கௌரவிக்கும் வகையில் அவரது ஓவியம் வரைய பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஓவியம் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.