பிச்சை எடுக்க வரவைக்கப்படும் குழந்தைகள்:நடவடிக்கை எடுக்க களம் இறங்குகிறது சென்னை காவல்துறை

பிச்சை எடுக்க வரவைக்கப்படும் குழந்தைகள்:நடவடிக்கை எடுக்க களம் இறங்குகிறது சென்னை காவல்துறை
பிச்சை எடுக்க வரவைக்கப்படும் குழந்தைகள்:நடவடிக்கை எடுக்க களம் இறங்குகிறது சென்னை காவல்துறை

சென்னையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்களை கண்டறியவும், குழந்தைகளை மீட்கவும் குழந்தைகள் நலப்பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் களம் இறங்கியுள்ளனர். 

சென்னை சாலைகளின் பிரதான சிக்னல்களில், குழந்தைகளும் தாய்மார்களும் பிச்சை எடுப்பதை நாம் பார்த்திருப்போம். அதில் பெரும்பாலான குழந்தைகள் வெளிமாநில குழந்தைகளாக இருப்பார்கள். இதில் குடும்ப வறுமைக்காக பிச்சை எடுப்பவர்கள் ஒரு புறம் என்றால், மறுபுறம் சில கும்பல்கள் வலுக்கட்டாயமாக குழந்தைகள் பிச்சை எடுக்க வைத்து பணம் ஈட்டி வருகிறது. 

இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் கீழ் செயல்படும் குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு ஈடுபட்டு வருகிறது. இந்த பிரிவு போலீசார், கடந்த ஆண்டு மட்டும் 135 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழு, அரசு குழந்தைகள் விடுதிகள், தனியார் தொண்டு நிறுவனம், குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்துள்ளது.

இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு போலீசார் கூறும்போது, “ பெரும்பாலான குழந்தைகள் ஆந்திரா, உத்தரப்பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து தரகர்கள் மூலம் ரயில் மூலமாக வரவழைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு அழைத்து வரப்படும் குழந்தைகள் பிச்சை எடுக்கும் தொழிலும், பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் பணம் ஈட்டுவதற்காக, பெற்றோர்களே குழந்தைகளை விற்கும் கொடுமையும் நிகழ்கிறது.

இது போன்ற குழந்தைகள் கடத்தும் தரகர்களை பிடிக்க சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே போலீசாருடன் இணைந்து குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் குழந்தை திருமணம், கொடுமைப்படுத்துதல், குழந்தை தொழிலாளர், கடத்தப்பட்ட குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் என 1263 குழந்தைகளை மீட்கப்பட்டு குழந்தை நலகுழுவிடம் ஒப்படைத்துள்ளோம்.

இதில் 438 பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.வெளிமாநிலத்தில் இருந்து குழந்தைகளை கொண்டு வரும் தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இதனைத்தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்கான் சிறப்பு நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.” என்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com