சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு: மூவரின் தூக்கு தண்டனை ரத்து
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
தேனியில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேனியை சேர்ந்த, சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, இந்த வழக்கில் அரசு தரப்பு விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. பல முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் தாமதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகள் பலர் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. இதனால் மனுதாரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஒரு வழக்கில் அரசு தரப்பின் விசாரணை குறைபாடு காரணமாக குற்றவாளிகள் விடுதலையானால் அதற்கு விசாரணை அதிகாரி தான் பொறுப்பு. அதுபோன்ற தவறு செய்யும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக உள்துறை செயலர் புதிய விதியை உருவாக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் ராஜாராமன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலையான சிறுமியின் குடும்பத்துக்கு 3 மாதத்தில் தமிழக அரசு 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.