சென்னையில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த விநோத் என்ற 28 வயது இளைஞருக்கும் பெரம்பூரைச் சேர்ந்த வளர்மதி என்ற 15 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த உறவினர்கள் திட்டமிட்டனர். சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தின் முன்பாக, திருமணம் நடக்கவிருந்த தகவல் அறிந்து அந்த இடத்துக்கு சமூக நல ஆர்வலர்கள் சிலர் விரைந்தனர். அங்கு உறவினர்களிடம் மணப்பெண்ணின் வயது சான்றிதழைக் கேட்டனர். பெண் வீட்டார் தர மறுத்ததால் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதோடு, திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, திருவான்மியூர் காவல் நிலையக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்தங்கிய, அதிகப் படிப்பறிவு இல்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணங்கள் நடப்பதுண்டு என்ற நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே சிறுமிக்குத் திருமணம் செய்ய நடந்த முயற்சி, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, திருமணம் தடுக்கப்பட்ட சிறுமியையும், அவரது பெற்றோரையும், கெல்லீசில் உள்ள சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ள அதிகாரிகள், அங்கு வைத்து கவுன்சிலிங் அளித்தனர்.