”டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் உயர்வு” - நீதிபதிகள் வேதனை

”டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் உயர்வு” - நீதிபதிகள் வேதனை
”டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் உயர்வு” - நீதிபதிகள் வேதனை

தமிழகத்தில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது என்று மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 29% உள்ளனர். 14 முதல் 18 வயது உள்ள குழந்தைகள் 10% உள்ளனர்.
குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் போன்ற பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

2021 ஆம் ஆண்டு CACL என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இறந்ததாக 14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 2016 வரை 1,75,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசு தரப்பில் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் அதில் பெரும் தாமதம் உள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை பெருமளவில் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்து, பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகிறது. ஆகவே, தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் குழந்தைகள் சிறப்பு மறுவாழ்வு மையம் அமைத்து, மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு பயிற்சிகள் அளித்து அவர்களுக்கான இழப்பீடுகளை விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, “இந்தியா இல்லாமல் உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் 180% குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது” என கருத்து தெரிவித்தனர்.

வழக்கு குறித்து மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைச் செயலர், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com