தமிழ் நடிகை மீது குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு
தமிழ் திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் மீது குழந்தைக் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது குழந்தையை கடத்திச் சென்றதாக அவரது முன்னாள் கணவர் ஆனந்த் ராஜ் அளித்த புகாரின் பேரில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆல்வால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வனிதாவிற்கும் ஆனந்த் ராஜீற்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் 2012-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக இருவரும் விவகாரத்துப் பெற்ற நிலையில், அவர்களது குழந்தை ஜெய்நிதா, ஆனந்த் ராஜ் வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆனந்த ராஜ் ஆந்திராவில் குடியேறினார். அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் சென்ற வனிதா ஏப்ரல் முதல் வாரத்தில் ஜெய்நிதாவை ஆனந்த ராஜின் அனுமதி பெற்று அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குறித்த காலத்திற்குள் மீண்டும் கொண்டு வந்து சேர்க்காததாலும், தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை என்ற காரணத்தாலும் ஆனந்த ராஜ் வனிதா மீது குழந்தையைக் கடத்தியதாக புகார் அளித்துள்ளார்.